நிகழ்வு விவரங்கள்

அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி

பின் செல்ல
IMG

அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா

“அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி”
-பேரா.மு.நித்தியானந்தன்

அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில் 08.10.2022 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. எஸ்.கே.ராஜென் ‘உலகத்தமிழ்க் கலையகம்’, ரி.சிவகுருநாதன் ‘Concern Sri Lanka Foundation’ ஆகியோர் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இலங்கை வானொலி வரலாற்று நாயகன், ஒப்பற்ற மாபெரும் ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் அரை நூற்றாண்டு கடந்த தனது ஒலிபரப்புத் துறை சார்ந்த வரலாற்றை முதன் முறையாக எழுத்தில் பதிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மிடம் ஒரே ஒரு ஒலிபரப்பு நிலையம் தான் இருந்தது. அது அன்று இலங்கை வானொலி, இன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம். 50 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட இன்றைய காலகட்டத்தில் தமிழ் வானொலி நிலையங்கள் பல்கிப் பெருகிவிட்டன.

ஒலிபரப்பின் தார்ப்பரியம் புரியாமலேயே வானொலி நிலையங்கள் நடைபெறுகின்றன. பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் உலகில் வானொலியின் தோற்றம் பற்றியவிபரத்தைக் கூறுகிறது. இலங்கையில் வானொலி ஒலிபரப்பின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் ஆரம்பகால ஒலிபரப்பாளர்கள் ஒலிபரப்புத் துறைக்கு வழங்கிய பங்களிப்பு, அவர்களின் வகிபாகம் என்பவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.

அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் சாதாரண வாசிப்புக்கு உரியது என்று கூறிவிடமுடியாது. ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்கள் இந்த நூலில் நிறைந்திருக்கின்றன.
இன்றைய இளந்தலைமுறை ஒலிபரப்பாளர்கள் தம்மை ஒரு நேர்த்தியான ஒலிபரப்பாளராக நிலை நிறுத்த இந்த நூல் பெரிதும் துணை புரியும். இலங்கை ஒலிபரப்பு வரலாற்றை அறிந்துகொள்ள அருமையான நூல்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் வெளியிட்டு வைக்கப்பட்ட அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் லண்டன் மாநகரில் அறிமுகவிழா கண்டது.

ஆனந்தி சூரியப்பிரகாசம்
————————————-
பி.பி.சி தமிழோசை புகழ் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். புத்தகம்
அருமையாக

உள்ளது என்று தொடங்கியவர் அருகில் அமர்ந்திருந்த அப்துல் ஹமீத் மீது அன்பு கொண்டு பேசி ஒரு செவ்வி காண ஆரம்பித்தார். அந்தளவுக்கு அப்துல் ஹமீத் அவர்களின் நூல் ஆனந்தி அவர்களைக் கவர்ந்து கொண்டது.


மாலி
——-
ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் ‘ஈழநாடு’ மாலி அவர்கள் இலங்கை வானொலி ஒலிபரப்பின் ஆரம்பத்தையும், உலக ஒலிபரப்பின் ஆரம்பத்தையும் நினைவுபடுத்தியவர், கொழும்பு வானொலி, இலங்கை வானொலி ஆரம்பம் பற்றியும், இலங்கை வானொலியின் முதல் அறிவிப்பாளர் சோ.நடராஜா, இலங்கை வானொலி முதல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சோ.சிவபாதசுந்தரம் எனப் பல முன்னோடிகள் பற்றி எடுத்துக்கூறினார்.வர்த்தக சேவையின் ஆரம்பம் பற்றிக் குறிப்பிட்ட மாலி அவர்கள் இலங்கை வானொலியின் ஒலிபரப்புத் தரத்துக்கு காரணிகளாய் அமைந்திருந்தவைகள் பற்றியும், எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் பணியையும் அவர் மூலம் இலங்கை வானொலி அடைந்த புகழையும் விரித்துரைத்தார்.இன்று உலகத்தமிழர்களை ஆளும் குரல் அப்துல் ஹமீத் எனப் புகழாரம் சூட்டினார்.

ஜோக்கிம் இருதயானந்தன்
—————————————-
1967ஆம் ஆண்டில் இலங்கை வானொலி தமிழ்ச்சேவைக்குத் தெரிவான ஐந்து அறிவிப்பாளர்கள்: ஜோக்கிம் இருதயானந்தன், ஜோக்கிம் ஃபெர்னாண்டோ,ராஜேஸ்வரி சண்முகம், சி.நடராஜசிவம், பி.எச்.அப்துல் ஹமீத் ஆகியோர் வரிசையில் இடம்பிடித்த பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஜோக்கிம் இருதயானந்தன் தமக்கு சானா சண்முகநாதன் பயிற்சி வழங்கியதையும், ஒலிபரப்பில் அறிவிப்பாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன என்பவை பற்றியும் எடுத்துக்கூறியவர் ஹமீத் அவர்கள் போல் ஒலிபரப்புத் துறையில் தானும் இயங்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக்கூறினார்.

யசோதா மயில்வாகனன்
————————————
அப்பா றேடியோ சிலோன் எஸ்.பி.மயில்வாகனன், அம்மா செந்தில்மணி. அம்மாவின் குரலை வானொலியில் கேட்டு அவரைக் காதலித்துக் கலியாணம் செய்துகொண்டார் எனக் கூறி சபையோரின் ஆரவாரமான கரவொலியைப் பெற்றார் யசோதா மயில்வாகனன்.
றேடியோ சிலோனைச்சேர்ந்த பல இளைய அறிவிப்பாளர்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்துல் ஹமீத், நடராஜசிவம் ஆகியோர் வீட்டுக்கு வந்தமை நினைவில் இருக்கிறது.அப்பாவின் பெயரால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி எனக் கூறினார்.
என்.செல்வராஜா
————————-
அரைநூற்றாண்டு கால ஒலிபரப்பு வரலாற்றைப்பதிவு செய்திருப்பதை மிக விரிவாக எடுத்துக்கூறிய நூலகவியலாளர் என்.செல்வராஜா இந்நூலை எழுத முழுமையான தகுதி பெற்றவர் என்றார்.அரங்க அளிக்கைகளில் அப்துல் ஹமீத் வகிபாகத்தை பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்கள் பதிவுசெய்ததை எடுத்துரைத்தார்.
கோவிலூர் செல்வராஜன்
————————————-
70கள் 80கள் எங்கள் பொற்காலம் என தமது கவிவரிகளால் கோவிலூர் செல்வராஜன் வாழ்த்தினார். தப்பில்லாத் தமிழ்தனைப் பேசி தனித்துவக்குரலால் தமிழுடன் வாழும் அப்துல் ஹமீதை அரங்கிற்கு வராமல் கோவிலூர் செல்வராஜன் குரல்வாயிலாக வாழ்த்தினார் புலவர் நல்லதம்பி சிவநாதன்.
எம்.என்.எம்.அனஸ்
—————————-
அழகுறத் தமிழ் பேசவேண்டும் என்பதை அப்துல் ஹமீத் அவர்கள்
செல்லுமிடமெங்கும் கூறிவருவதை எடுத்துரைத்த எம்.என்.எம்.அனஸ் இன்றைய வானொலி ஒலிபரப்பின் தன்மையைத் தெரிவித்து இலங்கை வானொலி மாணவர் மன்ற நிகழ்ச்சி அனுபவத்தை எடுத்துக்கூறினார்.
பேராசிரியர் மு.நித்தியானந்தன்
———————————————-
தமிழர்களின் வாழ்வியலின் அங்கமாகிவிட்டார் அப்துல் ஹமீத். அவர் வழிப்போக்கன் அல்ல! அப்துல் ஹமீத் வானொலித்துறை வழிகாட்டி என பேராசிரியர் மு.நித்தியானந்தன் எடுத்துரைத்தார்.
தமிழர்களின் வாழ்வில் தடம்பதித்த பெருமகனாகவே அப்துல் ஹமீத் இந்த நூலில் தோற்றம் பெறுகிறார் என பேராசிரியர் மு.நித்தியானந்தன் மிகச் சிறப்பாக நூல் ஆய்வை வழங்கியிருந்தார்.
பி.எச்.அப்துல் ஹமீத்
——————————-
வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.